Wednesday, May 9, 2007

சைவம், அசைவம் - எது சிறந்தது?

இதற்கு ஜீவன்களின் கருமையம் பற்றிய விளக்கம் பெற்றிருத்தல் தகுதியாகும். கருமையம் என்பது ஒவ்வொரு ஜீவனுக்கும் அதன் உடலின் மையத்தில் அமைந்திருக்கும். இது கணினியின் Hard Disk - ஐ போன்றது. அதுபோலவே பணிபுரியவும் செய்யும். அதன் வெளியீடே ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண்பாலுக்கு விந்தணுவாகவும், பெண்பாலுக்கு முட்டையாகவும் வெளிப்படும். இவை இணைந்தே இன்னொரு உயிர் தோன்றும். இதன் பதிவுகளுடன் கூடிய வெளியீட்டினை நவீன மருத்துவம் ஜீன்கள் என்றழைக்கிறது.

அப்படிப்பட்ட மகத்தான சக்தி படைத்த கருமையத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், துய்க்கும் ஒவ்வொரு செயலும் பதிவாகிக்கொண்டே இருக்கிறது. எப்படி ஒரு மாட்டினை பார்த்தபார்வையில் அது மனதில் பதிந்து எவரேனும் மாடு என்ற உடன் அது விரைவாக மனதில் உருவம் பெறக்கூடிய அதிசயம் நடக்கிறது? சிந்திப்பீர். உங்கள் ஒவ்வொரு அனுபவமும் அலை வடிவத்தில் மாற்றம்பெற்று சுருக்கம்பெற்று கருமையத்தில் பதிந்து நீங்கள் நினைக்கும்நொடியில் அது உருவமும் அல்லது அந்த அனுபவம் அதே தன்மைகளுடன் உங்களுக்கு உள்ளுணர்வாக மலரும்.

இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். ஆடு, மாடு, கோழி போன்ற உயிரிணங்களுக்கும் 5 உணர்வுகள் உண்டு. அவை அனைத்தையும் கருமையத்தில் சேமித்துக்கொண்டே வரும். பலியிடப்படும் உயிரின் கடைசி மரண உணர்வுகளும் கருமையத்தில் பதிவாகும். அதே வேகத்தில் அதன் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பதிவாகும். நீங்கள் அந்த உணர்வுள்ள உயிரிணத்தினை புசிக்கும்போது அந்த பதிவுகள் நீக்கம் பெற்றிருக்காது. ஏனெனில் அனைத்தும் அலைவடிவிலேயே இருக்கும். அதன் காரணமாக அவற்றின் பதிவுகள் உங்களுள்ளும் இறங்கி பாவப்பதிவாக உங்கள் கருமையத்திலும் பதிவாகும்.

இப்பொழுது புரிகிறதா பெரியவர்களின் பொன்மொழி கொன்றால் பாவம் தின்றால் போச்சு (உங்கள் கருமையத்திற்குள் போச்சு).

ஆனால் மரம் செடி கொடிகளும் உயிர்னம்தானே என்று சிந்திக்கலாம்.மரத்தின் கருமையம் வேராக இருக்கிறது. நீங்கள் காய்கனிகளை பறிக்கும்போது அந்த மரத்தின் வேதனையானது கருமையத்தில் இறங்கும். அதுவும் பூமியோடு தொடர்புகொண்டிருப்பதால் உடனடியாக பூமிக்கு கடத்தப்படும்(எர்தாகிவிடும்). கீரையை வேரோடு பிடுங்கும்போதும் அது தன் உணர்வுகளை உடனடியாக பூமிக்கு கடத்திவிடுகிறது. எனவே சைவ உணவு வகைகளின் உணர்வுகள் பூமிக்கு கடத்தப்படுவதால் பாவ பதிவுகள் அதை சுவைப்பவர்களுக்கு ஏற்படுவதில்லை. பூமியும் ஒரு உணர்வற்ற பொருள் என்பதால் அந்த துன்ப அலைக்கு மதிப்பு நடுநிலைப்படுத்தப்படுகிறது.

இதுதான் சைவ உணவை நம் நாட்டு அறிவியலறிஞர்கள் வேதங்களில் எழுதியும், நம் வாழ்க்கை கலாச்சாரத்தில் மறைமுகமாக புகுத்தியும் வைத்திருப்பதன் காரணமாகும். காலப்போக்கில் பல்வேறு அந்நிய படையெடுப்புகள் மற்றும் நாகரீக சிந்தனை என்கிற பெயரில் புறப்பட்டவர்களின் பிரசாரங்களாலும் இந்த காரணம் நம்மிடமிருந்து காணாமல் போய்விட்டது.

மரத்தின் கருமையம் விதைகளில் இருக்கிறதே என்று சந்தேகம் தோன்றலாம். விதைகளில் மரத்தின் கருமையம் இருப்பின் மரம் விதை நீக்கம் பெற்ற உடன் மரணித்துவிடும். அதே நேரத்தில் ஒரு உயிரிணத்திற்கு ஒரு கருமையம் மட்டுமே இயற்கையில் அமையும்.

இதற்கு டெஸ்ட் ட்யூப் பேபி உதாரணம் மூலம் விளக்கமளிக்க முயல்க்கிறேன். ஆணின் கருமையம் விந்துவிலும், பெண்ணின் கருமையம் முட்டையிலும் இருப்பதாக கொண்டால் அவர்கள் விந்துவையும், முட்டையினையும் வெளியில் சோதனைக்குழாயில் இணைக்க மனித உடலிலிருந்து வெளியே எடுத்தால் உடனே மனிதன் இறந்துவிடுவான். ஆனால் ஏன் மரணிக்கவில்லை, மனிதனின்(ஆண் பெண் இருபாலரையும் குறிப்பதாக கொள்ளவும்) சாரமான விதையை மட்டுமே(அதாவது மனித ஜீன்களை - தன்மைகளை) உபயோகித்து சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்குகின்றனர். இதனால் மனிதன் மரணிப்பதில்லை. அதுபோலதான் விதைக்கும் வேருக்கும் உள்ள தொடர்பும் கருதப்படவேண்டும்.

Tuesday, May 8, 2007

பிறவித்தொடர் அறுப்போம்

உலகில் மனிதப்பிறப்பு உயரியபிறப்பு. ஆனால், பிறப்பின் நோக்கம்? நாம் மீண்டும் மீண்டும் பிறப்பதற்கல்ல. நாம் நமது பரம்பரை வழியாக(இதுவே ஜென்மங்கள்/பிறவிகள் ஏனெனில் நாம் ஜீன் மூலமாக நமது முன்னோரின் தன்மைகளை பெற்றிருக்கின்றோம்) மற்றும் பிறப்பிற்கு பிறகு 12 வயதுக்கு பின்னர் செய்யக்கூடிய பாவங்களையெல்லாம் கரைத்து(பிராயச்சித்தங்கள், புண்ணியபதிவுகள் மூலம்) அதற்கான பலன்களை அனுபவித்து கரைத்து எல்லா பாவங்களையும் போக்கியபின்னர் மரணமில்லாப்பெருவாழ்வு(முக்தி) அடைவதே வாழ்வின் லட்சியமாகும். இவற்றை கரைக்க பெரிதும் உதவியாக இருக்கக்கூடிய மிக நம்பகமான மற்றும் வேகமான வழிமுறையே தவம்/யோகம் ஆகும்.

பக்தி பாதையிலும் பாவங்களை விரதம்/யாத்திரைகள் மூலமாக கரைத்துக்கொள்ள முடியும். ஆனால் அதற்கு மிக நீண்டகாலம் பிடிக்கும். மேலும் அந்த அளவிற்கு நமக்கு ஆயுள்நீட்டிப்பு வேண்டும். மேலும் புதிய பாவங்களை பழக்கத்தின் காரணமாக சேர்த்துக்கொள்ளாத மனவலிமை வேண்டும். இல்லையென்றால் பாவக்கணக்கு நேராக ஆக ஒரு பக்கம் கூடிக்கொண்டே இருக்கும். இதனால் பாவக்கணக்கு கரையும் வேகம் குறைவாகவே இருக்கும்.

ஆனால் யோக மார்க்கம் வேகமாக கரைத்துக்கொள்ள வழிகாட்டுவதுடன் புதிதாக பாவங்களை சேர்த்துக்கொள்ளாமலிருக்க பழக்கங்களை மாற்றியமைக்கும் மனவலிமையையும் கொடுப்பதால், இருக்கின்ற பாவங்களை மட்டும் கரைத்தால் போதுமென்ற சுதந்திரத்தையும் கொடுக்கும்.

கடலிலிருந்து ஆவியாகும் நீர் பல படிமுறைகளை வழிகளை கடந்து மீண்டும் கடலை அடைவது போல சிவத்திடம் தோன்றிய நாம் மீண்டும் சிவத்தை அடைவதே நமது நோக்கமாக கொண்டிருத்தல்வேண்டும்.

பிறவித்தொடர் அறுக்கும் பொருட்டுதான் பட்டினத்தார் அவர்களும் இறைவனிடம் இப்படி வேண்டுகிறார்

"இறைவா எனக்கு மேலும் மேலும் தண்டனைகளையே கொடுத்து எல்லா பாவங்களையும் கரைத்து நீக்கிக்கொள்ள உதவு" என்று.

மேலும் சனீஸ்வரர் ஒருவருடைய தசையில் வருகின்றார் என்றாலே அவர்கள் மிகவும் பயந்து விடுவார். அவர் தொடர்ச்சியாக சோதனைகளையே தருவார் என்று. ஆனால் அவர் மானிட வாழ்விற்கு மிகவும் உதவியாகவே இருக்கின்றார். அவர் ஒவ்வொருவருடைய பாவக்கணக்கையும் கடும் தண்டனைகளையும், சோதனைகளையும் கொடுப்பதன் மூலம் நீக்கிவிடுகின்றார். அவர் நம்முடைய ஜாதகத்திலிருந்து நீங்கும்போது நம்மை நமது பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியே விலகுகின்றார். அதனால் அவர் நம்முடைய தசைக்கு வருகின்றார் என்றால் நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும். மேலும் அவருடைய காந்த அலைக்கதிர்கள் (இவையே ஒவ்வொரு பாவப்பதிவுகளையும் ஒவ்வொரு மனிதனின் கருமையத்திலிருந்து எடுத்து அதற்கு பலனாக மனக்குழப்பங்களையும் தகுந்த விளைவுகளையும் கொடுக்கிறது) நமக்கு நன்மையே செய்யவேண்டும் என்று தினந்தோறும் சங்கல்பம் செய்வதன் மூலம் அவற்றை நல்லமுறையிலே உபயோகித்துக்கொள்ளலாம். விரைவில் பாவப்பதிவுகள் அகலும்போது அவர் நமக்கு அளவில்லா நன்மைகளை செய்வதை நாம் கண்கூடாக பார்க்கலாம். ஆனால் இந்த மனநிலை, மனவலிமை எவ்வளவு பேருக்கு சாத்தியமாகும்? இதனை யோகக்கலை ஒருவருக்கு எளிதாக்கி கொடுக்கிறது. மனவலிமையை அதிகரித்து தண்டனைகளை ஏற்றுக்கொள்ள மனப்பக்குவம் கொடுக்கிறது.

Thursday, May 3, 2007

ஆசை சீரமைத்தல்

எல்லோரும் ஆசைகளை விட்டொழிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் வழிமுறை சொல்பவர் யார்? இங்கு ஆசையை குறைக்கசொல்வதற்கு பதிலாக மகரிஷி அவர்கள் ஆசையை முறைப்படுத்த சொல்கிறார். அதுவும் வழி முறையோடு. எப்படி?

அதற்கு தினம்தோறும் மனதை ஆராய வேண்டும். மனதில் ஆசை எழும்போதே நமக்கு நாமே சில கேள்விகளை கேட்கவேண்டும். அவை,

அந்த அசையினால் நமக்கோ மற்றவருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ ஏதேனும் தீமை ஏற்படுமா? எனில் அதை அப்பொழுதே விட்டொழிக்கவேண்டும்.

அந்த ஆசையை நாம் அனுபவிக்கும் அளவுக்கு நமக்கு உடல்வலிமை, ஆயுள் நீளம், சுற்றுச்சூழல் முதலியவை ஒத்துழைக்குமா என்று நோக்கவேண்டும். இல்லை என்று மனதிற்கு தோன்றினால் அந்த ஆசையையும் நீக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் நாம் ஆசை ஏற்படும்போதே ஆராய்ந்தால் நம்முடைய ஆசைகள் பல என்றிருந்த நிலை மாறி சில என்றாகிவிடும். அவற்றையும் மீண்டும் மறு ஆய்வுக்கு உட்படுத்தினால் ஒன்று என்றாகிவிடும். இப்பொழுது மனம் லேசாக உணரும். அதனால் அந்த ஒரு ஆசையை நோக்கியே மனம் சிந்தித்து சிந்தித்து அந்த ஆசையை அடைய எல்லா வழிமுறைகளையும் தேடும். அவற்றில் சிறந்ததை நாம் தீர்மாணித்து அந்த திசையை நோக்கி நாம் நடைபோட்டால் வெற்றி நிச்சயம். அந்த ஆசையும் நிறைவேறி மனதில் ஆசைகள் முடிவுபெற்று நிறைவு பெறும். அப்பொழுது மேலும் நாம் லேசாக இருப்பதை உணர முடியும்.

இவை அனைத்தும் ஆரம்பத்தில் சிரமமாக தோன்றினாலும் சிறிது சிறிதாக பழகப்பழக நாம் இதை பழக்கமாக்கிவிடலாம். அப்பொழ்து நம்மை அறியாமலேயே நாம் நமது ஆசைகளை ஆராய்வோம். இதற்கு ஆசை ஆராய்தல் என்று தலைப்பு கொடுத்துள்ளார் நமது குரு வேதாத்ரி அவர்கள்.

இதில் இன்னொன்றையும் மனதில் கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே ஒரு ஆசையை அடையும் பாதையில் பயணப்பட்டுக்கொண்டிருக்கும்போது புதிய ஆசைகள் மனதில் தோன்றினால் நம்மனமே அதை அநாயாசமாக ஒதுக்கி தனது வாழ்க்கை நோக்கமாக ஒரே குறிக்கோளை நோக்கி வீறு நடைபோடும். அதே நேரத்தில் நாம் நமது செயலில் சில செக் பாயிண்டுகளும் வைத்துக்கொள்ளவேண்டும். அவை இந்த செயலில் நாம் இந்த நிலையை அடைந்தால் இது சரியான பாதை என்பதற்கான ஒரு வழிகாட்டியாகு. பாதை சரியானதாக இருந்தால் பயணமும் சரியாக இருக்கும். நாமும் வெற்றி பெறுவோம்.

ஒழுக்கம் அடிமைத்தனமா?

இன்று பெரும்பாலான் இளைஞர்கள் புலன் கவர்ச்சியினாலும், கட்டுப்பாடற்ற சுதந்திரத்தாலும், பெற்றோரின் கண்கானிப்பு குறைபாடாலும் பாதை தவறி எதில் இன்பமில்லையே அதையே இன்பமென்று நினைத்து லயித்துக்கொண்டிருக்கின்றனர். இது இளைஞர்களின் செயல்திறனை பாதிப்பதுடன் நீண்ட கால நோக்கில் பெரும் மனவீழ்ச்சிக்குதான் வழி வகுக்கும்.

ஒழுக்கம் ஒருமனிதனை தலையை தாழ்த்தச்செய்கிறது அதே நேரத்தில் மனதை நிமிரச்செய்து தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. இதனால் நிச்சயம் ஒவ்வொருவருடைய செயல்திறனும் மேம்படும் எனபது நிச்சயம். பூரண, அள்ள அள்ள குறையாத பேரின்பத்தை ஒழுக்கத்தினாலேமட்டுமே பெறமுடியும். உதாரணமாக நாம் திரைப்படம் சென்றால் நமக்கு அந்த காட்சிகளை க்ண்டுகளிக்கும்வரை மகி்ழ்ச்சியும், திரையரங்கை விட்டு வெளியே வரும்போது இனம்புரியாத மன பாரமும் ஏற்படும். இதை நான் பலமுறை அனுபவித்துள்ளேன். இதுதான் சிற்றின்பம் என்பதற்கான அடையாளம். அந்த இன்பத்தினால் நாம் பேரின்பத்தை அடையமுடியாது என்பதற்கான அறிகுறி. இவற்றை நாம் சிறிது சிறிதாக நம்மை நாமே பழக்குவதன்மூலம் விட்டொழிக்கலாம். அதனால் ஒழுக்கம் அதிகரித்து மனதில் தன்னம்பிக்கையும் அதிகரித்து தனக்கும் சமுதாயத்திற்கும் ஒருவரால் பயனுள்ள முறையில் வாழ முடியும்.

மற்றபடி இன்றைய இளைஞர்கள் நினைப்பதுபோல் இது ஒன்றும் அடிமைத்தனமல்ல.