Sunday, December 9, 2007

திருக்குறள் - மெய்பொருள் விளக்கம்

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"

இந்த குறளுக்கான மெய்பொருள் விளக்கம்,

உலகப் பொருள்கள் மீது பற்றுள்ள வரையிலும் மெய்ப்பொருளான இறைநிலையை உணர முடியாது. பிறப்பு இறப்பு எனும் வாழ்க்கைக் கடலை கடக்க முடியாது. உடல், உயிர், சீவகாந்தம் மூன்றும் கூடிய சீவனின் உடலுக்கு பிறப்பு முதல் இறப்பு வரையில் பெரும்பாலும் துன்ப அனுபவங்களாகவே இருக்கின்றது. இந்த உண்மையை ஒரு பேரறிஞர் தொகுத்துக் கூறியிருக்கிறார் ஒரு கவியின் மூலம்

வேதநூல் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேனும்
பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினைந்தாண்டு
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்பு துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமாநருளானே

இது ஒரு பக்திப் பாடலாக இருந்த போதிலும் மனித வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய துன்பங்களை விளக்கிக் கூறுகிறது.

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"

என்ற குறளில் இறைநிலையுணர்வும் பொருள்கள் மீது பற்று விட்டு மனம் தூய்மை பெற வேண்டியதும் ஒன்றிணைந்து பேறாக உணர்த்தப்பட்டுள்ளன.

இறைநிலையை அதன் பேரியக்கச் சிறப்புகளை அதன் வியத்தகு விளைவுகளை ஐயமின்றி ஒருவர் உணர்ந்து கொண்ட பின்னர்தான் உலகப் பொருட்கள் மீது உள்ள பற்றுக்கள் நீங்கும். பிறவிக் கடலையும் கடக்க முடியும். பொருள் பற்று உடையவர்கள் அடிக்கடி உலகப் பொருட்கள், மக்கள், புலன் இன்பம் இவற்றை நினைந்து நினைந்து மனதை அவற்றிலேயே ஈடுபடுத்திக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு நினைவும் அவர் கருமையத்தில் வினைப்பதிவாகி அது அடிக்கடி மூளை செல்கள் மூலம் அவ்வப்போது எண்ணங்களாக மலர்ந்து கொண்டிருக்கும் இதனால் மனம் களங்கப்பட்டுக்கொண்டே இருக்கும். இக்களங்கமே இறைநி்லையை உணர முடியாத தடையாக அமையும். இதனை அழுகணி சித்தர் ஒரு கவியின் மூலம் விளக்குவதை உணர்வோம்.

காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமை மறித்து நகை புரியப் பார்ப்பரன்றோ
நாட்டார் நம்மை மறித்து நகை புரியப் பார்த்தாலும்
காட்டனை மேலேறி என் கண்ணம்மா
கண் குளிரப் பாரேனோ

காட்டான் என்றால் உருவமற்றவன் தன் இருப்பை உணரக் காட்டிக்க் கொள்ளாதவன் என்பதாகும். இத்தகிய காட்டான் எனும் உருவமற்ற நிலை பேரியக்க மண்டலம் முழுவதிலும் நிறைந்து இறைவன்(இறைவெளி) ஆகவும், ஒவ்வொரு சீவனிலும் அறிவாகவும் இருக்கிறது. எனவ்வே காட்டான் என்ற சொல் அறிவையும் குறிக்கும். இறைவனையும் குறிக்கும்.

காட்டன் எனும் அறிவானது பேரியக்க மண்டல தத்துவங்களில் பஞ்ச பூதங்களாக உள்ள நிலம், நீர், வெப்பம், காற்று, விண் என்ற ஐந்து நிலைகளையும் தாண்டி இவற்றிற்குப் பிறப்பிடமாகவுள்ள பரம்பொருளை உணர்ந்து அதனோடு இணைய முயலும்போது எனது வாழ்க்கையில் நான் பற்று கொண்டு அனுபவித்த வினைப்பதிவுகள் எல்லாம் எண்ணங்களாக அடுத்தடுத்து தோன்றுகின்றன. இந்த நிகழ்ச்சி எப்படியிருக்கின்றதென்றால் எனது வினைப் பதிவுகளிலிருந்து எழும் எண்ணங்கள் என்னை நோக்கி நீ எங்களையெல்லாம் தாண்டிப் போய் கடை நிலையாகவுள்ள பரம்பொருளை உணர்ந்து கொள்ள முடியுமா என்று தடுத்து நிறுத்தி என்னைப்பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போல் உள்ளது. எப்படியாயினும் எனக்கு உறுதியிருக்கிறது. வினைப்பதிவுகள் என்ற தடைகளை வினைத்தூய்மை, மனத்தூய்மை இவற்றால் நீக்கிகொண்டு என் அறிவைக் கொண்டே இறைவனை அடைவேன் என்ற கருத்தே இக்கவி. உலகப் பொருட்கள் மீது உள்ள பற்றுக்கள் எவ்வாறு இறைநிலையுணரும் பேற்றைத் தடுக்கின்றது என்பதை விளக்குவதற்கே உவமையாக இந்த அழுகணி சித்தர் பாடலை நினைவு படுத்தியுள்ளேன்.

மறை பொருட்களை உணரத் தக்க ஆறாவது அறிவோடு வாழும் உயர்ந்த பிறவியை பெற்ற மனிதனுடைய பிறவியின் நோக்கம் மிக உயர்ந்ததாகும். அது இறை நிலையான மெய்ப்பொருளை உணர்ந்து அறிவின் முழுமையைப்பெற்ற, பிறப்பு இறப்புத் தொடரை அறுத்து விட வேண்டுமென்பதேயாகும். பொருள் பற்றுப் பதிவுகள் அடிக்கடி ஒருவருக்கு எழுந்தால் மனமானது அந்தப் பொருளை அடிக்கடி நினைந்து நினைந்து அதை அடைவதற்கும் அனுபவிப்பதற்கும் தனது ஆற்றலை வாழ்நாள் முழுவதும் செலவிட வேண்டி இருக்கிறது. இதனால் இறைநிலையை நாடுவதற்கும் அதனை உணர்வதற்கும் வாய்ப்பு கிட்டுவதில்லை. எனவே இறைநிலையை உணர்வதற்கும் பிறவிக் கடலை நீந்துவதற்கும் பொருள் பற்றை நீக்கி மனத்தூய்மை பெற வேண்டும். இந்த உயர்ந்தப் பேற்றினை பெறுவதற்கு ஒருவர் தானாக் முயன்றால் அந்நிலை கிட்டுவது அரிது. ஏனெனில் அத்தகைய அறிவின் முழுமைப்பேறு போதனை முறை, சாதனை முறை இரண்டும் இணைந்ததாகும். எனவே இந்த உயர்ந்த அறிவு நிலையைப் பெற அறிவில் முழுமை பெற்று பற்று நீங்கிய ஒரு வழிகாட்டியான ஞானாசிரியர் துணை வேண்டும். எனவே முறையாகப் பயின்று பற்று விட்டு வாழும் ஒரு ஞானாசிரியரைப் பற்ற வேண்டும். இந்த நுட்பத்தை உணர்த்துவதே இந்த குறளில் முதற் பகுதில் வரும் "பற்றுக பற்றற்றான் பற்றினை" என்பதாகும்.

வினைப்பயனாகத் தொடர்ந்து வரும் பிறவிக் கடலை நீந்த வேண்டும் என்ற பெருநோக்கம்கொண்ட இறை வேட்பாளருக்கு ஞானாசிரியர் தரும் ஒரு நாள் போதனையால் மட்டும் பற்று விட்டு மனம் தூய்மை அடைந்து விடும் என்று கருத முடியாது. பற்று நீக்குவது போதனை முறை மட்டுமல்ல. சாதனையும் வேண்டும். ஞானாசிரியர் உடனிருந்து அவர் வாழ்க்கை முறையினைப் பின்பற்றி நடந்து பயிலவேண்டும். அத்தகைய நிறைவான அறிவு நிலையைப் பெறும் வரையிலும் ஞானாசிரியர் தொடர்பை விட்டு நீங்காமல் அவரை பற்றி நின்று பயன் காண வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறார் குறளாசிரியர். இக்குறளின் கடைப் பகுதியான "அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" என்று, நீ முழுமை பெற்று உனது பொருள் பற்று நீங்கி இறையுணர்வு பெற்று வெற்றியடையும் வரையில் ஞானாசிரியரை பற்றி நில் என்பதே இக்குறளின் பொருள்.